Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் புதிதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று

செப்டம்பர் 28, 2021 09:41

கோவை: கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க கடந்த செப்டம்பர் 1-ந் தேதி அரசு அனுமதி அளித்தது. பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 18 வயதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், அன்னூர் உள்ளிட்ட பகுதியில் படிக்கும் 87 பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரு ஆசிரியரும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் கோவை நகரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 7 பேரும், பிளஸ்-2 மாணவர்கள் 2 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கோவை காந்திபுரம் ஜி.பி. சிக்னல் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பணியாற்றும் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டது.

பாப்பநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர்கள் பணியாற்றிய வகுப்பறைகளுக்கு மட்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பள்ளி வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இதேபோல மீனா எஸ்டேட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7 ஆசிரியர்கள் மற்றும் 2 மாணவர்கள் ஆகியோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்